Sunday, March 6, 2022

பிரபன்ன குலம் - இரண்டாம் பகுதி

அப்படியென்றால் சமுதாய சீர்திருத்தத்தை அன்றே செய்தார்கள் என்கிறீர்களா? 

இந்தக் கேள்வியை நண்பர் மட்டும் அன்று, ஸ்ரீவைஷ்ணவத்தின் கருத்தியல் வரலாற்றில் கொஞ்சம் ஆழ்ந்து போவோர் யாருக்குமே கேட்கத் தோன்றும். ஆனால் ஒன்றை மறந்துவிட்டுத்தான் இந்தக் கேள்வியே எழுகிறது. சமுதாயம் என்னும் யதார்த்தமும், அதைச் சீர்திருத்த முடியும் என்னும் சாத்தியமும் எப்பொழுது மனித குலத்தில் கருத்து ரீதியாக வடிவெடுக்கிறது? ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இயற்கையை மனிதன் மாற்றித் தன் வசதியைப் பெருக்க முடியும்; தன் சூழ்நிலைகளுக்கு அடிமையில்லை மனிதன் என்பவன்; வழிவழியான நம்பிக்கைகள் ஒரு நாளும் நிரூபிக்கப்பட்ட அறிவின் இடத்தை நிரப்ப இயலாது என்று இத்தகைய ஓர்மைகள் கனமாக மனித மனத்தில் உருவெடுக்கத் தொடங்கியதும்தான் சமுதாய சீர்திருத்தம் என்னும் கருத்தோ சாத்தியமோ ஏற்படுகிறது. இந்தக் காலத் தொடக்கத்தை மேற்கத்திய கருத்துலக வரலாற்றாசிரியர்கள் ‘ரொமாண்டிக் ஏஜ்’ என்கிறார்கள். தன் நம்பிக்கை அல்லது மனிதக் கனவின் நனவாக்க முயற்சியின் காலம் என்று இதை ஒருவாறு புரிந்துகொள்ளலாம். 

நாம் பேசுவதோ இதற்கு முந்தைய நம்பிக்கைகளின் காலம். எனவே சமுதாய சீர்திருத்தம் என்னும் வடிவில் இயங்கும் காரணி எதுவும் அன்று இயங்க வழியில்லை. சமுதாய சீர்திருத்தம் என்பது நவீன நம் காலத்தின் ஆக்க பூர்வமான இயக்கம். ஆனால் அன்று பிரபஞ்ச இயக்கம், உலகின் தொடக்கம், வழிவழியான வழக்கங்களின் தோற்ற காரணம் என்று எதற்கெடுத்தாலும் பதில்கள் புராணம் மூலமாகத்தான் பெற இயலும். மொழி இயல், நியாயம், வாக்யமீமாசை என்று உயர்தர படிப்புகள்தான் ஆய்வுக்குப் புகலான துறைகள். அரசியல் என்று வந்தால் அரசன், பேரரசன், சக்ரவர்த்தி, ராஜ ஆக்ஞை இப்படித்தான் அமைப்பு. இதற்கு நடுவில்தான் இதே உலகைச் சேர்ந்த ஒருவர்தான், தாம் மிக உயர்ந்த பக்திமானாக இருந்துகொண்டே, அதே பக்தியின் வழியில் யோசிக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் அதல, சுதல, விதல என்று பதினான்கு உலகின் அமைப்புகள்தாம் அவர் மனத்திலும் இருக்கிறது. பக்தி சம்பந்தப்படாத பொது வாழ்க்கையில் அவரும் அதே தர்ம சாத்திரங்களைத்தாம் உடன்பட்டவராகவும் இருக்கிறார். அவர் எதையும் புரட்டிப் போடும் புரட்சியைப் பற்றி யோசிக்கவில்லை. இன்று நாம் அவர் செயல்களைப் பற்றி யோசிக்கும் போது என்ன புரட்சி என்று வியக்கலாமாய் இருக்கிறது என்றாலும் அவை அனைத்தும் அவர் அவருடைய நம்பிக்கை உலகின் காரணிகளை மட்டும் கொண்டே இயற்றியதுதான். 

இதுதான் எனக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. பக்தி என்பதை, இன்னும் சொல்லப்போனால் பிரபத்தி என்பதை, கடவுளின்பால் இதய பூர்வமாக எழும் காதல் உணர்வை வைத்து அவரால் திருமால் அடியார்களின் குலம் என்று உலகு அனைத்தையும் உட்படுத்திப் பார்க்க முடிந்திருக்கிறது. அதில் மனிதருக்கு மனிதர் உயர்வு தாழ்வு கருதுதல் பாவம் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது, அந்த உலகில் தர்மசாத்திரங்களைப் பொருத்தமற்றது என்று புறந்தள்ளிவிட முடிகிறது. அதற்கான தமிழ் வேதத்தைக் கண்டடையவும் முடிந்திருக்கிறது. அதைக் காலத்திற்கும் மறையாமல் முன்னிறுத்தி வளர்த்து நிலைத்த வடிவும் தர முடிந்திருக்கிறது. அவர் கண்ட அந்தப் பிரபன்ன சமுதாய ஒற்றுமை திருமாலின்பால் எழும் பிரபத்தியின் ஆட்சிக்குள் இருப்பது. திருமால் நெறி சாராது வெளியில் இருக்கும் புற உலகை அவரும் தர்ம சாத்திரங்களின் உலகமாகத்தான் காண்கிறார். ஆனால் அங்கும் அவருடைய பக்தி ததும்பும் இதயம் மனிதருடைய கஷ்டங்களை நேரடியாக ஒட்டியுணரும் தன்மைத்தாய் இருக்கிறது என்பதுதான் வேறுபாடு. 

திருமால் அடியார்களின் உலகினுள் வந்தால் தர்ம சாத்திரங்கள் ஆட்சி இழந்துவிடுகின்றன. அங்கு ஆட்சியோ பிரபன்ன தர்மம்தான் முக்கியம். ஏனெனில் அதுதான் விசேஷ தர்மம். விசேஷ தர்மம் பொருத்தமுடையதாக ஆகும் இடத்தில் பழைய சாதாரண தர்மம் வலுவிழந்துவிடும். திருமாலுக்கே அற்றுத் தீர்ந்த அடிமைக்காதல் பூண்டோருக்குள் உடல் சார்ந்த தர்ம சாத்திர ரீதியாக ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்தலே பாவம்! ஏனெனில் திருமாலின் திருவடிகளில் சரணம் எய்துவதால் ஒருவனுக்குப் பண்டைக் குலம் விலகிப் புதிய தொண்டக் குலம் என்பது ஏற்படுகிறது. ஆம் நாராயணா என்னும் நாமம் குலம் தரும். 

இதில் தீவிரமான நிலைப்பாடும் எடுத்தவர்கள் உண்டு. ஓர் ஊரில் குளிப்பதற்காக ஒரு பிரபன்னர் குளத்திற்குச் சென்றபோது, அவர் அனைத்து பிரபன்னர்களும் குளிக்கும் துறையில் சென்று குளிக்கவும், உயர்சாதியினர் அவரைத் தம் துறையில் வந்து குளிக்குமாறு கூற அவர் அதற்குப் பதிலாகக் கூறினாராம். ‘நீங்கள் வர்ணதர்மத்தைக் கைக்கொண்டவர்கள். நாங்களோ பிரபன்னர்கள் கைங்கர்ய தர்மத்தைக் கைக்கொண்டவர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு நாளும் தொடர்பே இல்லை’ என்று. இது ஒரு புறம் என்றால் பொதுவாகப் பிரபன்ன தர்மம், ஆனாலும் உலகியல் சடங்குகள் என்று வரும் பொழுது, மணவினை என்று வரும்போது தர்மசாத்திர வழிகாட்டல் என்று தங்கள் அன்றாட வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் ஒரு புறம். உண்மையில் உயர் சாதி என்பது திருமாலுக்குத் தொண்டு என்னும் பிரபத்தியை இயல்பாக மனத்தில் எழச்செய்யும் சாதிதான். சாதாரணமாக மக்கள் உயர்ச்சாதி என்று மயங்கும் பிறப்பானது ஒருவரை மனத்தளவில் எப்பொழுதும் அஹங்காரமும், சுயப்பெருமை உணர்வும் கொள்ளச் செய்து பிரபன்னனாக ஆகும் தகுதியை இல்லாததாக ஆக்கிவிடும். மிக முயன்று பயின்றுதான் பிரபன்ன மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி ஏற்படுத்திக் கொண்டாலும் மனப்பழக்கம் மீண்டும் கர்வம், பெருமிதம் என்று தலைதூக்கிச் சரணாகத மனப்பான்மையை மீண்டும் மனத்தில் நழுவச் செய்கிறது. இந்தத் தொல்லைகள் இருப்பதால் அது உண்மையில் உயர்ந்த பிறப்பு ஆகாது. வேதங்களைக் கற்று பகவத் பக்தியை அடைவதற்குத் துணை செய்யும் என்றுதான் அந்தப் பிறப்புக்குப் பொருள் ஏற்படுகிறது. அவ்வாறு பக்தியை எழச்செய்யவில்லையேல் அந்த உயர்பிறப்பால் எந்தப் பயனும் இல்லை - என்றும் ஆசாரியர்கள் தெளிவாக எழுதும் போது ஒன்றை உணர்கிறோம். சரணாகத நெறி என்பது எத்தகைய மலர்ச்சியை மனித மனத்துள், மனித குலத்துள், உலகில் அதே நம்பிக்கைகள் மயமான பழம் உலகிலேயே ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் பெரும் வியப்பு. (குறிப்பு: ஸ்ரீவசன பூஷணம், ஸ்ரீபிள்ளை லோகாசாரியார்) 

அதுவும் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் பிரபன்ன குலம் என்றும், நான்கு வேதங்களின் இடத்தில் பிரபன்ன குலத்திற்கான வேதங்கள் நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்றும், மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள் வேத அங்க உபாங்கங்கள் போன்று என்றும் கூறும்போது ஆசாரியர்கள் பிரபத்திக்கான புதிய உலகையே பார்க்கின்றனர். ஆசார்ய ஹ்ருதயத்தில் மேலும் தொடர்ந்து வடமொழி வேதம் என்பதற்கு இருப்பது போலவே பிரபன்ன சமுதாயத்திற்கான கோத்ர சரண கூடஸ்தர் போன்ற அமைப்புகளுக்கான கருத்தியலைத் தருகிறார். தமிழ் வேதத்திற்கும் ரிஷி, கவி, முனி என்று நம்மாழ்வாருக்குப் பெயர்கள் அமைந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திவ்யப் பிரபந்தங்கள், தமிழ் வேதங்களின் அடிப்படையில் எழுந்த தமிழ் வேதாந்த ரகசிய நூல்கள், அவற்றுக்கான வியாக்கியானங்கள் என்று பிரபத்தி நெறிக்குப் பெரும் கோட்டையே கட்டிவிடுகிறார்.

இந்தக் கருத்தூக்கம் எந்த அளவிற்குத் தொடர்ந்து நிலைபெற்றது, நாம் முன்னர் கூறியதுபோல் ஆன்மிகத்திற்குப் பிரபத்தி, உலகியலுக்கு தர்ம சாத்திரம் என்று வகைதொகை செய்து அனுசரித்துப் போகும் பெரும்பான்மை போக்கு. நம்மாழ்வாரின் திவ்யப் பிரபந்தங்களைத் தமிழ் வேதமாகக் காணாமல் வடமொழி வேத வேதாந்தக் கருத்துகளை விளக்கத் துணைபுரியும் உபநூலாகக் கருதும் போக்கும் சில வித்வான்களிடம் காண முடிகிறது. அந்நியப் படையெடுப்புகள் என்று ஏற்பட்ட பின்பு அன்றாட வாழ்க்கையையே மீண்டும் நிலைப்படுத்துவதே பெரும்பாடு என்னும் போது ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் பெரும் முனைப்பு தொடர்ந்து விளைவுகளைக் காண முடியவில்லை என்று தோன்றுகிறது. இதற்கிடையில் அவரும் பரமபதித்துவிடுகிறார் என்பதும் ஒரு காரணம். 

இதெல்லாம் இருந்தாலும் நம்பிக்கைகள் மயமான அமைப்பிற்குள், அந்த உலகிலேயே இவ்வாறு திருமால் அடிமைக் காதல் என்பதையே அடிப்படையாகக் கொண்டு இத்தகைய பிரபன்ன சமுதாய ஒற்றுமையைக் கண்டிருக்கிறார்கள், அதற்கு நாதமுனிகள் தொடங்கி ஆசார்யர்களின் கனவு நனவாகியும் இருக்கிறது, ஓரளவிற்கு என்றாலும், அத்தனைக்கும் அரண் அமைத்து ஆக்கம் செய்தவர், உரக்கப் பிரபத்தி என்னும் ஒளிமிகு தர்மத்தை உபதேசித்தவர், உடையவர் என்று அரங்கன் மகிழ்ந்த ஸ்ரீராமாநுஜர் என்பது மத வரலாற்றில் ஒரு வியப்பான அத்யாயம் என்றே தோன்றுகிறது. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

பிரபன்ன குலம் - முதல் பகுதி

பிரபத்தி நெறியின் கீழ் மனித குலம் முழுமையையும் வர்ணாஸ்ரமம், அந்தஸ்து, பதவி, ஆண் பெண் போன்ற காரணங்களால் தோன்றும் உயர்வு தாழ்வுகள் எதுவுமின்றி ஒரே பிரபன்ன குலமாக ஆக்கும் கனவுதான் நம்மாழ்வார் தொடங்கி, நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர் என்று ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள், அவருக்குப் பின்னரும் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் வரையிலும் கூட ஓங்கி நிற்கிறது. மற்ற அனைத்தும் இந்தப் பெருமக்களுக்கு இந்தப் பெரும் கனவு, இதற்கான ஆயத்தங்களாகவே அமைகின்றது. இந்தக் கனவை நனவுபோல் கண்டுதான் நம்மாழ்வார் பொங்கிப் பாடுகிறார். 

‘பொலிக! பொலிக! பொலிக! 
போயிற்று வல் உயிர்ச்சாபம்;  
நலியும் நரகமும் நைந்த 
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை; 
கலியும் கெடும்; கண்டு கொண்மின்; 
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் 
மலியப் புகுந்து இசைபாடி, 
ஆடி, உழிதரக் கண்டோம்.’ 

அந்தப் பொற்கனவை நனவாக்க இட்ட அடித்தளமே பிரபத்தி நெறி. அந்தப் பிரபத்திக்கு ஆன்ற பனுவலே அன்று தேர்த்தட்டில் மாயன் உரைத்த வாக்கு என்னும் ஸ்ரீபகவத் கீதை. அந்தப் புரையறு நற்பனுவலை அவ்வண்ணம் நோக்கி அதில் ஆழ்ந்த பெற்றியோரான ஆசார்யர்கள் சிறிதே அதிர்ந்துதான் போய்விட்டனர். காரணம் சகல சாத்திரங்களின் கடைநின்ற சாரப் பிழிவாக அவர்கள் கண்டடைந்த அந்தப் பிரபத்திக்கான பனுவலாய் நிற்பது எதுவோ, அதுவே, அந்தப் பனுவலே, வேதாந்த முக்கியப் பனுவல் மூன்றில் ஒன்றாகப் பயிலப்பட்டும் வருகிறது. சகல வேதாந்த தாத்பர்யமும் நன்கு ஆழ்ந்து யோசித்தால் இந்த ஆன்மிகச் சாரப் பிழிவான கருத்தாம் பிரபத்தியில் வந்து நிற்கிறது. எதிலும் மடங்காமல் தீர்க்கமாக யோசிக்க முடிவெடுத்தவர்களுக்கு இதைச் சொல்ல முடிகிறது. ஆனால் அதுவரை பழக்கப்பட்ட வழிமுறைகள், கருத்துமுடிவுகள் அனைத்திற்கும் முற்றிலும் வித்யாசமாக வந்து நிற்கிறது. இதுதான் சத்தியம். இது நன்கு தெரிகிறது. ஆனால் வழமை ஒப்புமா? உபாசனம் என்று பழக்கப்பட்ட மனம் இதை ஏற்குமா? 

‘தத்வ நிர்ணயம் செய்த உய்யக்கொண்டார் என்னும் ஒரு வித்வானுக்கு (ஆசாரியார் ஆன உய்யக்கொண்டார் வேறு இவர் வேறு) அவர் பக்தி நிஷ்டராய் இருந்த காரணத்தாலே, அவரைப் பிரபத்தி நிஷ்டராம்படி பண்ணவேண்டும் என்று இந்தப் பிரபத்தி என்னும் கருத்தை ஸ்ரீராமாநுஜர் விளக்கியுரைத்த பின்னர் அந்த வித்வான் கூறிய பதில், ‘தாங்கள் சொல்லும் அர்த்தம் அழகாக இருக்கிறது. ஆயினும் பக்தி உபாசனம் ஆகிய இதை விட்டுத் தாங்கள் சொல்லும் பிரபத்தியைக் கைக்கொள்ளத் தக்க ருசி எனக்கு இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதற்கு அவருக்கு உடையவர் கூறிய பதில்: ‘வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்; பகவத் பிரஸாதம் இல்லாமையாலே ருசி பிறந்ததில்லை’ என்பதாகும்.’ (குறிப்பு - முமுக்ஷுப்படி, ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் வியாக்கியானம்) 

ஆனால் பிரபத்தி என்னும் உன்னத நெறியைப் புரிந்துகொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஒருவர் ஒன்று ஆஸ்திகர் என்றால் பிரபன்னராக இருப்பார். இல்லையேல் நாஸ்திகராக இருப்பார். இவற்றுக்கு நடுவில் எந்த நிலைப்பாடும் சாத்தியம் இல்லை. இப்படித்தான் பராசர பட்டருக்கு எம்பார் என்னும் ஆசாரியர் சொன்னார் பிரபத்தியைப் பற்றிக் கூறும்பொழுது. அதாவது கடவுள், மதம், ஆன்மிகம் எல்லாமும் நன்கு யோசித்துப் பார்த்தால் பிரபத்தியில் வந்துதான் முடிகிறது என்பது கருத்து. நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீராமாநுஜருக்கு முந்தைய ஆசாரியர்கள் இந்தப் பிரபத்தி என்னும் சாரதமம் ஆன கருத்திற்குச் சான்றுப் பனுவலாக ஸ்ரீபகவத் கீதை திகழ்வதைக் கண்டார்கள். அவர்களின் பார்வையில் முழு சாத்திர உலகமும் மேம்போக்காகப் பல விஷயங்களைச் சொன்னாலும் தாத்பர்ய சாரம் என்று விசாரித்துக்கொண்டே போனால் எல்லாம் இந்தப் பிரபத்தி என்னும் அருங்கருத்திற்கே வந்து முடிந்து நிற்கிறது. ஸ்ரீகீதையின் உண்மை அப்பொழுதான் நன்கு புலப்படுகிறது. 

ஆனால் இந்தப் பிரபத்தி என்னும் உன்னத நெறிக்கே அமைந்த உத்தம வேதமாகத் திகழ்வதோ நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், மற்ற மூன்று அவரது நூல்களான திருவிருத்தம், திருவாசிரியம் பெரிய திருவந்தாதி. தமிழின் நான்கு வேதங்களாகத் திகழும் இவற்றுக்கு அமைந்த துணை வேத அங்கங்களாய்த் திகழ்வன மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள். இந்த அரிய கண்டுபிடிப்புதான் நாதமுனிகளை அந்தப் பாடு படுத்தியிருக்கிறது. இதை இழந்துவிடக் கூடாதே என்று கவலையுற்று அவர் செய்த திட்டங்கள்தாம் மற்றவை. ஆயினும் இவையெல்லாம் முழுமையடைய ஒரு பெருமகனார்க்காக அவர் காலத்தில் காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில் அதுதான் அவருக்கு யோகக் காட்சியில் நம்மாழ்வார் கூறிய சத்தியம். இனிவரப் போகும் அந்தப் புண்ணியாளர் எப்படியிருப்பார் என்பதையும் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே யோக தர்சனமாகக் காட்டியும் கொடுத்ததனால் அன்று தொடங்கி, நாதமுனிகளின் பேரனாரான ஸ்ரீஆளவந்தாரின் காலத்தளவும் நீண்ட காத்திருப்பு. அப்படியும் காத்திருக்கத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு சிறு குழுவாவது அமைந்ததே அது எவ்வளவு பெரும் அதிர்ஷ்டம்! அத்தனை பேருடைய அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் ஒருங்கே கவரும் வல்லதாய் இருந்தது அவர்கள் கண்டடைந்த பிரபத்தியாம் பொன்னெறி. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

நீங்கள் எந்த ராமாநுஜரைச் சொல்கிறீர்கள்?

கேள்வியே பொருளற்றதுதான். ஒருவேளை கணிதமேதைக்கும், விசிஷ்டாத்வைத ஆசாரியருக்கும் குழப்பிக்கொண்டு ஒருவர் கேட்கலாம். இந்திய ஞானத்துறைகள் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டு இயங்கும் ஒருவரின் நூலிலேயே இப்படி ஒரு வாக்கியப் பகுதி வருகிறது - ’Srinivasa Ramanuja, the equally important founder of the school of Vedanta known as Visishtadvaita'. நான் குறிப்பிடுவது இந்தக் குழப்பத்தை அன்று. ஸ்ரீராமாநுஜர் அனைத்து மக்களுக்கும் அவர்களின் ஆசையே காரணமாகப் பிரபத்தி நெறி பற்றிய தெளிவை அளிக்கச் சொன்னார் என்றதும், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபகவத் கீதா பாஷ்யம் எல்லாம் எழுதிய பாஷ்யக்காரராகிய ராமாநுஜர், கத்யத்ரயம் எழுதிய ராமாநுஜர், பிறகு திவ்யப் பிரபந்த வியாக்கியானங்கள், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்கள், பிரபத்தி நெறியையும், ஆழ்வார்களின் சரணாகதி நெறியை முன்னிறுத்திய ஆசார்யர்களின் கிரந்தங்கள், குருபரம்பரை நூல்கள், பிரபத்தி நெறியின் ஸாரத்தை நூற்பாக்களாக ஆக்கி உரைக்கும் ரஹஸ்ய கிரந்தங்கள், அவற்றின் வியாக்கியானங்கள் இவற்றில் வரும் குறிப்புகளின் மூலம் நமக்குத் தெரியவரும் ஸ்ரீராமாநுஜர் பற்றிய தெளிவு, இவற்றில் எந்த ராமாநுஜர் என்று இவற்றைக் குறித்துத்தான் சிலர் இந்தக் கேள்வியை எழுப்பவதுண்டு. 

அதாவது அப்படிக் கேட்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், ஸ்ரீபாஷ்யம் என்பதுதானே விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்ட வந்த வியாக்கியானம்? எதைச் சொல்வது என்றாலும் அதிலேயே சொல்லியிருக்கலாமே? பிரபத்திதான் தமக்குப் பிடித்த வழி என்று  கருதினால், பிரபத்தி வழி என்பது எதையும் சாராது தன்னளவில் சுதந்திரமான மார்க்கம் என்றால், அதைக் கைக்கொள்ள எந்தத் தடையும் யாருக்கும் இல்லை, தகுதிப் பிரச்சனைகள் இல்லை, ஜன்மம், அந்தஸ்து, செல்வம், படிப்பு என்னும் எந்தக் காரணத்தினாலும் உரியவர் அல்லாதார் என்ற பாகுபாடு எதுவும் இல்லை பிரபத்தி நெறிக்கு, ஆசையுடையோர்க்கு எல்லாம் பிரபத்தி நெறியின் மிக உயர்ந்த நுட்பங்களையெல்லாம் தயக்கமே இன்றிச் சொல்லலாம், சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லும் ராமாநுஜர் ஏன் பிரஹ்ம சூத்ரங்களுக்கு வியாக்கியானமாக எழுதிய ஸ்ரீபாஷ்யத்திலும், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்கரஹம் முதலியவற்றில் ஏன் அந்தவிதமான தம்முடைய முடிவுகளைச் சொல்லவில்லை? சரி அவற்றில் இல்லையென்றாலும் ஸ்ரீபகவத் கீதைக்கு எழுதிய வியாக்கியானத்தில் சொல்லலாமே? அதே ஸ்ரீபகவத் கீதைதானே பிரபத்தி நெறிக்கு ஆணிவேர் நூலாக இருப்பது? அதில் வரும் சரமசுலோகத்தின் அர்த்தம் காண்பதில்தானே பிரபத்தி என்பது தன்னடைவிலேயே சுதந்திரமான மார்க்கம் என்று சொல்லப்படுகிறது? 

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது கேள்வியில் ஒரு நியாயம் இருப்பது போல் படுகிறது. ஆனால் சில விஷயங்களை மறந்துதான் இந்தக் கேள்வி கேட்கப் படுகிறது. பிரஹ்ம சூத்ரங்கள் என்னும் வேதாந்த சூத்ரங்கள் என்பது என்ன? உபநிஷதங்களில் பிரம்மம் என்னும் தத்துவத்தை, பிரபஞ்சத்திற்கே பெரும் காரணமாக இருக்கும் கடவுள் தத்துவத்தைக் குறித்து எங்கெங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்தனைக் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து அந்தப் பிரம்ம தத்துவம் எத்தன்மையது என்று நெறிப்படுத்திக் காட்டும் நூல் பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மையைப் பற்றிய உறுதிப்பாட்டிற்குப் பின்னர் அந்தப் பிரம்மத்தை அடையும் வழி யாது, அடைந்தபின்னர் ஜீவன் பெறுகின்ற பேறு, பலன் யாது என்பதையெல்லாம் விவரிப்பது பிரம்ம சூத்திரம். பிரம்மத்தின் தன்மை யாது என்பதிலும், பிரம்மத்தை அடையும் வழி யாது என்பதிலும் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவும். புதிதாக அந்தச் சூழலில் உள்புகும் ஒருவர் பிரம்மத்தின் தன்மை குறித்துத் தாம் ஒரு சித்தாந்தத்தைச் சொல்ல முயன்றால், அங்கே ஏற்கனவே நிலவும் முன்சென்ற பிரபலமான சித்தாந்தங்களை எதிர்கொண்டு பிரம்ம சூத்திரங்களுக்கு அவை விளக்கமாக ஆகமுடியாது என்பதை நன்கு பொருத்தமுறக் காட்டிப் பின்னரே தமது சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லி அதைப் பொருத்தமுற விளக்க முடியும். ஏற்கனவே வேதாந்த சூத்ரங்களுக்கான விளக்கம் என்னும் சூழலில் கோலோச்சிக் கொண்டிருப்பதோ அத்வைத சித்தாந்தம் அல்லது கர்மஞான சமுச்சயம் என்னும் சித்தாந்தம் போன்றவைதான். அவற்றை மறுதலித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தமே பிரம்ம சூத்ரங்களின் முடிவாகத் தேரும் பொருள் என்று காட்டுவது முதன்முன்னர் முக்கியமான செயல் அவ்வாறு வியாக்கியானம் எழுதப் புகுவோருக்கு. 

உபநிஷத மஹாவாக்கியங்களின் பொருளை ஒருவன் உணர்ந்ததும் அதில் ஏற்படும் ஞானத்தால் மோக்ஷம் என்று மோக்ஷ சாதன வழியையும், கர்மம் மற்று ஞானம் இவற்றின் ஒருங்கிணைப்பால் மோக்ஷம் என்னும் கருத்தையும் மறுத்து கர்மத்தை அங்கமாகக் கொண்டு உபாசனம், வேதநம், தியானம் முதலிய சொற்களால் சுட்டப்படும் பக்தியின் உருவான ஞானத்தினால், உபாசனை வடிவான ஞானத்தினால் மோக்ஷம் என்ற கருத்தை நிலைநாட்டுவது அங்கு ஸ்ரீராமாநுஜரின் பணி. வேதாந்தத்திற்கு அடிப்படை நூல்கள் என்பன இந்த பிரம்ம சூத்திரம், ஸ்ரீபகவத் கீதை, உபநிஷதங்கள் என்னும் மூன்று. இவைதான் பிரஸ்தானத் திரயம் என்று சொல்லப்படுவன. இன்ன தகுதியுடையோர்தாம் இவற்றைப் படிக்கலாம் என்னும் நிபந்தனைகள் உடையன. எனவே வேதாந்த ரீதியாக முன்னர் நிலவும் விளக்கங்களை மறுத்துத் தாம் சொல்லவரும் விசிஷ்டாத்வைத சித்தாந்த ரீதியாக இந்த மூன்று நூல்களுக்கும் மாற்றான அதேநேரத்தில் பொருத்தமான விளக்கம் சொல்லும் போது அதற்குத் தக்கவாறுதான் விளக்கம் எழுத முடியும். 

இதை நாம் ஒருவர் தேர்வு எழுதுவதோடு ஒப்பிடலாம். தேர்வுக்கு உட்பட்டு வினாத்தாளுக்குப் பதில் எழுதும் ஒருவர் அந்த வினாக்களுக்குப் பொருத்தம் உடைய பதில்களை எவ்வளவு திறமையாகத் தருகிறார் என்பதில்தான் அவருடைய வெற்றி அந்தத் தேர்வில் இருக்கிறது. அந்தத் தேர்வு என்பது ஓர் எழுத்தாளர் தாம் சுதந்திரமாகத் தமக்கு இஷ்டமான கருத்துகளை வடிக்கும் கட்டுரை போன்றோ நூல் போன்றோ சூழ்நிலை கிடையாது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர் பின்னர் தமக்கு மிகவும் பிடித்த கருத்துகளைப் பல நிரூபணங்களுடன் ஒரு நூலாக வடிக்கலாம். அந்த நூலின் முடிவுகள் அவர் முன்னர் தேர்வில் எழுதிய சில ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் வரையறைகளைக் கடந்த பெரும் வளர்ச்சியாக இருக்கலாம். அப்பொழுது அவரை இப்படி நாம் கேட்க மாட்டோம். ஏன் இப்பொழுது இவ்வளவு தெளிவாக இந்தக் கருத்துகளைக் கூறுகிறீர்களே? அந்தத் தேர்விலேயே அந்தக் கருத்துகளை எழுதவில்லையே ஏன்? என்று கேட்பது பொருத்தம் இல்லை. எனவே தமக்கு மிகவும் பிடித்த வழியாகப் பிரபத்தி நெறியை கத்யத்ரயம் என்னும் உரைநடை நூல்களில் எழுதும் ஸ்ரீராமாநுஜர் ஏன் அந்தக் கருத்தையே பிரம்ம சூத்திர வியாக்கியானமான ஸ்ரீபாஷ்யத்தில் எழுதவில்லை? ஏன் வேதார்த்த ஸங்கரஹத்தில் எழுதவில்லை? ஏன் பிரஸ்தானத் திரய நூல்களில் ஒன்று என்ற விதத்தில் எழுதப்படும் ஸ்ரீபகவத் கீதா வியாக்கியானத்தில் எழுதவில்லை? இதற்கெல்லாம் சேர்த்து ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்களே கத்யத்ரயத்திற்கான தமது வியாக்கியானத்தில் விளக்கம் தருகிறார். அந்த விளக்கத்தைத்தான் நான் சிறிது விரிவாக இன்றைக்குப் புரியும் வகையில் மேலே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் வரிகளைக் காண ஆவல் உடையோருக்குக் கீழே அதையும் தருகிறேன்: 

‘ஸ்ரீபாஷ்யத்தில் ‘தத்வமஸி’ இத்யாதி வாக்யஜன்ய ஜ்ஞானமே மோக்ஷ ஸாதனம் என்றும், கர்மஜ்ஞான சமுச்சயமே மோக்ஷ ஸாதனம் என்றும், சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, கர்மாங்ககமாய், வேதந த்யான உபாஸந சப்த வாச்யமாய், பக்தி ரூப ஆபன்னமான உபாஸனாத்மக ஜ்ஞானமே வேதாந்த ப்ரதிபாத்யமான மோக்ஷ ஸாதனமென்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே, இவர் மோக்ஷ ஸாதனமாக அறுதியிட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு, தம்முடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தையே விச்வஸித்திருக்கும் ஸாத்விகர், இத்தையே விச்வஸித்திருக்கக் கூடும் என்று பார்த்தருளி, ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய், தமக்குத் தஞ்சமுமாகத் தாம் அறுதியிட்டிருக்கும் அர்த்தம் பிரபத்தி என்னும் இடத்தை இக்கத்ய ரூபேண வெளியிட்டருளுகிறார்.’ 

உரைநடை வடிவில் இவ்வாறு பிரபத்தி பற்றிய தம் ஈடுபாட்டையும், தம் நிச்சயத்தையும் ஸ்ரீராமாநுஜர் வெளியிட வேண்டிய காரணத்தில் முக்கியமான அம்சமாக ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஒரு கருத்தைக் கூறுகிறார். அதை நான் அச்சு எழுத்தில் காட்டியிருக்கிறேன். அது என்னவென்றால், தமது வேதாந்த உரை நூல்களை மட்டும் பார்க்கும் ஸாத்விகர்களுக்கு என்ன தோன்றும்? அதுவும் எப்படிப்பட்ட ஸாத்விகர்? ஸ்ரீராமாநுஜராகிய தாம் தமக்கு ருசியுடைய வழி என்று எதைக் காட்டுகிறாரோ அதையே தங்களுக்கும் உற்ற ஒரே நல்வழி என்று விச்வாஸம் கொள்ளும் ஸாத்விகர். அப்படிப்ப்பட்டவர்கள், இந்த வியாக்கியானங்களில் காட்டிய உபாஸனாத்மகமான வேதாந்த பக்தி என்னும் இதுதான் ஸ்ரீராமாநுஜராகிய தாம் உகந்த வழி என்று இதையே தங்கள் விச்வாஸத்திற்கும் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீராமாநுஜர் அவர்களுடைய நன்மைக்காக வேண்டி, தம்முடைய ருசி எந்த வழியில் இருக்கிறது, தாம் மட்டுமன்று தம்முடைய ஆசார்யர்களும் எந்த வழியைத் தங்கள் ருசிக்கு ஏற்றதாகக் கைக்கொண்டார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டியே இவ்வாறு உரைடை வடிவில் பிரபத்தி நெறி பற்றிய தேர்ந்த கருத்தாக இந்தக் கத்யத்தை வெளியிடுகிறார் என்பது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை அவர்கள் தரும் விளக்கம். எனவே எந்த ராமாநுஜர், பாஷ்யக்காரரா, அவரா இவரா என்றெல்லாம் குழம்பவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. மிகவும் தெளிவாக ஸ்ரீராமாநுஜரின் நிலைப்பாடு என்ன, வேதாந்த வியாக்கியானங்களில் அவருக்கு இருந்தக் கட்டுப்பாடு என்ன, கத்யத்ரயம் அவர் வெளியிட்டதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாக அரணமைத்து எழுதியது போல் பதிவுபடுத்தியிருக்கிறார் பரமகாருணிகரான (பெரும் கிருபையே வடிவெடுத்தவரான) ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. அவர்க்கு நம் நன்றி என்றும் உரித்தாகுக. 

ஒரே ஒரு கேள்வி இப்பொழுதும் எழலாம். வேதாந்த அடிப்படை நூல்கள் என்னும் வரிசையில் ஸ்ரீபகவத் கீதைக்கு வேதாந்த பக்திஉபாஸனம் ரீதியாக உரை எழுதியது போல் அதே ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறியின் படியே ஓருரை எழுதியிருக்கலாமே? இது அவர் காலத்தில் நடக்கக் கூடிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் ஸ்ரீபகவத் கீதைக்கான பிரபத்தி நெறி ரீதியிலான அர்த்தங்கள் அவர் காலத்தில் முந்தைய ஆசார்யர்களான திருக்கோட்டியூர் நம்பி போல்வாரிடத்தில் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டவையாக இருந்தன. அந்த அர்த்தங்களையே தாம் பதினெட்டு முறை நடந்து நடந்து மீண்டும் அனுப்பப்பட்டு கடைசியில் ஒரு வழியாக யாருக்கும் சொல்லக் கூடாது என்று ஸ்ரீநம்பியால் சபதம் வாங்கிக் கொள்ளப்பட்டுப் பின்னர் உபதேசமாக வாங்கினார். அந்த அர்த்ததையே அனைவருக்கும் பூரிதானமாகக் கொடுத்தார் என்று பார்த்தோம். எனவே அப்படி ஒரு வியாக்கியானம் ஸ்ரீபகவத் கீதைக்குப் பிரபத்தி நெறி ரீதியில் எழுத வேண்டியதைத் தம் சீடர்களுக்குப் பணியாக விட்டுச் சென்றார். அந்தப் பணியையே அஷ்டாதச ரஹஸ்யங்கள் முதலிய திருமந்திரம், த்வயம், சரம்சுலோகம் என்னும் மூன்று ரகசியங்களைக் குறித்து நூற்பாக்கள் வடிவிலான நூற்களும் அவற்றுக்கு வியாக்கியானமும் எழுதிய ஆசார்யர்கள் அந்தப் பணியை நிறைவு செய்தனர் என்று சொல்லலாம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***