Wednesday, October 19, 2022

ஸ்ரீராமாநுஜர் நூற்றியெட்டுத் தியானம்

திருவரங்கத்தமுதனாரின் ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதியைப் படிக்கும் பொழுது ஓர் உற்சாகம் தோன்றியது. என்னவெனில், 108 பாடல்களிலும் வருகின்ற இராமாநுசர் என்னும் பெயரோடு சேர்ந்த சொற்றொடர்களை அப்படியே அஷ்டோத்தரசதம் (நூற்றியெட்டு) என்பது போல் தொகுத்து அதை வைத்து 108 பெயரோடு வரும் சொற்றொடர்களுக்கும் பூவிட்டுப் பிரார்த்தித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. நான் கற்பனை மட்டுமே செய்தேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். அந்த நூற்றியெட்டு இராமாநுசன் நாமங்களின் தொடர்களையும் கீழே தந்துள்ளேன். அனைத்தும் அமுதனாரின் சொற்கள். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளிப் பிள்ளையாருக்கே படைப்பது என்று சொல்வார்கள். இதுவும் அது போல்தான். அமுதனாரின் வார்த்தைகளைத் தொகுத்து நூற்றெட்டுத் திருப்புகழ் ஆகச் சொல்லிப் பார்ப்பது என்றால் .. அமுதனாருக்கு நன்றி. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பாடலை ஞாபகப் படுத்தக் கூடும். ஞாபகப் படுத்த வேண்டும். 108 முறை இராமாநுசன் திருநாமம். பிள்ளைகளின் களியைக் கண்டு பெரியவர்கள் கோபிப்பார்களோ.. இல்லையே. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


பூ மன்னு மாது பொருந்திய மார்பன் பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்த இராமாநுசா ! 

குறையல்பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமாநுசா ! 

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசா ! 

ஊழிமுதல்வனையே பன்னப் பணித்த இராமாநுசா ! 

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசா ! 

கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசா ! 

பழியைக் கடத்தும் இராமாநுசா ! 

பொய்கைப்பிரான் திருவிளக்கைத் திருவுளத்தே இருத்தும் பரமனே இராமாநுசா ! 

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்தாளும் இராமாநுசா ! 

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசா ! 

பாண்பெருமாள் சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமாநுசா ! 

மழிசைக்கிறைவன் இணையடிப் போது அடங்கும் இதயத்து இராமாநுசா ! 

சீர் அரங்கத்தய்யன் பசுந்துளவத் தமிழ்மாலை அணியும் பரன் தாள் ஆதரிக்கும் மெய்யனே இராமாநுசா ! 

கொல்லிக் காவலன் சொல் பதிக்கும் பெரியவரைத் துதிக்கும் பரமனே இராமாநுசா ! 

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமாநுசா ! 

சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளலே இராமாநுசா ! 

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனிய எங்கள் இராமாநுசா ! 

சடகோபனைச் சிந்தையுள் பெய்யும் பெரியவர் சீரை உயிர்க்குதவும் இராமாநுசா ! 

மாறன் விளங்கிய சீர், செந்தமிழ் ஆரணம் என்று அறிதர நின்ற இராமாநுசா ! 

சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமாநுசா ! (20)

யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமாநுசா ! 

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமாநுசா ! 

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசா ! 

மெய்ஞ்ஞானத்துக் கார் தானாம் இராமாநுசா ! 

காரேய் கருணை இராமாநுசா ! 

திக்குற்ற கீர்த்தி இராமாநுசா ! 

கொழுந்து விட்டோங்கிய வள்ளல்தனத்து இராமாநுசா ! 

பின்னைதன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமாநுசா ! 

தென்குருகைப் பிரான் வேதப் பசுந்தமிழைப் பத்தி வீட்டில் வைத்த இராமாநுசா ! 

உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமாநுசா! 

தென்னத்தி ஊரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமாநுசா ! 

ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்து அளித்த அருந்தவன் இராமாநுசா ! 

பூதலம் காப்பதற்கென்று ஆன இராமாநுசா ! 

எங்கள் நலத்தைப் பொறுத்த நின் நயப்புகழ் இராமாநுசா ! 

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமாநுசா ! 

காசினியோர் இடரின்கண் விழுந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர்பின் படரும் குணனே எம் இராமாநுசா ! 

பத்தி வெள்ளம் குடிகொண்ட கோயிலே இராமாநுசா ! 

புண்ணியர் தம் வாக்கில் பிரியா தவனே இராமாநுசா ! 

தன் ஈறில் பெரும் புகழ் தெருளும் தெருள்தரும் இராமாநுசா ! 

வாமனன் சீலனே இராமாநுசா !  (40)

ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆக்கும் அண்ணலே இராமாநுசா ! 

எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவனே தீதில் இராமாநுசா ! 

அறம் சீறும் உறு கலியைத் துரக்கும் பெருமையனே இராமாநுசா ! 

எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமாநுசா ! 

எனக்கும் தன்னைத் தந்த சொல்லற்கரிய செம்மை திகழ் இராமாநுசா ! 

திசை அனைத்தும் ஏறும் குணனே இராமாநுசா ! 

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணலே இராமாநுசா ! 

புன்மையிலோர் பகரும் பெருமையனே இராமாநுசா ! 

தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமாநுசா ! 

பாவு தொல்சீர் எதித்தலை நாதா இராமாநுசா ! 

பரிநெடுந்தேர் விடும்கோனை முழுதுணர்ந்த அடியர்க்கமுதம் இராமாநுசா ! 

அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்த எம் இராமாநுசா ! 

அற்புதன் செம்மை இராமாநுசா ! 

மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசா ! 

தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமாநுசா ! 

புனிதன் புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமாநுசா ! 

நல் தவர் போற்றும் இராமாநுசா ! 

வாதில் வென்ற மெய்ம்மதிக் கடலே எம் இராமாநுசா ! 

மிக்க நான்மறையின் சுடரொளியால் கலியிருள் துரக்கும் இராமாநுசா ! 

குணம் திகழ் கொண்டலே இராமாநுசா !  (60

அரு முனிவோர் தொழும் தவத்தோனே எம் இராமாநுசா ! 

யான் இறையும் வருந்தாவகை பொருந்து மன்னுமாமலர்த்தாள் அருளும் எம் இராமாநுசா ! 

படியைத் தொடரும் மிக்க பண்டிதனே இராமாநுசா ! 

மாறன் பசுந்தமிழ் பாய்மத வேழமே எங்கள் இராமாநுசா ! 

வாழ்வு பெறும் ஞானம் தரும் நங்கள் இராமாநுசா ! 

வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசா ! 

உயிர்கட்கு அரண் அங்கு அமைத்த இராமாநுசா ! 

கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமாநுசா ! 

வந்து எடுத்துத் தன் சரண் தந்த எந்தையே எம் இராமாநுசா ! 

அருள் செய்யும் நலம் மிக்க பெருங்கருணை எம் இராமாநுசா ! 

எம் பெருந்தகை வண்மையனே இராமாநுசா ! 

மிக்க வண்மை செய்யும் இராமாநுசா ! 

உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசா ! 

அப்போது ஒரு சிந்தையால் அருளும் எம் இராமாநுசா ! 

வந்து தன் புகழே மொய்த்தலைக்க நின்ற இராமாநுசா ! 

இன்பம் தரும் தன் இணைமலர்த் தாள் ஈய்ந்தருளும் இராமாநுசா ! 

என் வினைகளை வேர் பறியக் காய்ந்த வண்மை திகழும் இராமாநுசா ! 

இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய எம் இராமாநுசா ! 

இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமாநுசா ! 

நல்லார் பரவும் இராமாநுசா !  (80

எனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுசா ! 

புண்ணியன் சீர்முகில் தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசா ! 

கார்கொண்ட வண்மைக் கடலே எம் இராமாநுசா ! 

ஓதில் உலப்பிலா சீர் வெள்ள வாரி எம் இராமாநுசா ! 

தொண்டர் பேதைமை தீர்த்த எம் இராமாநுசா ! 

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமாநுசா ! 

உணர்வில் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமாநுசா ! 

வலி மிக்க சீயமே இராமாநுசா ! 

போற்றரும் சீலத்து எம் இராமாநுசா ! 

இந் நீள் நிலத்தே எனை ஆளவந்த இராமாநுசா ! 

எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்த இராமாநுசா ! 

செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தியனே இராமாநுசா ! 

என் பெரு வினையைத் தன் அருள் என்னும் ஒள்வாள் உருவி வெட்டிக் களைந்த இராமாநுசா ! 

பரந்தாமம் என்னும் திவம் தரும் தீதில் இராமாநுசா ! 

பல் உயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம் இராமாநுசா ! 

தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு உள்ள எம் இறைவா இராமாநுசா ! 

தன்னை உற்றாரைத் தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் குணம் சாற்றிடும் இராமாநுசா ! 

சரணம் என்றால் இனி எம் வசத்தே எம்மை விடாத எங்கள் இராமாநுசா ! 

நீள் நிலத்தே பொன் கற்பகமாம் இராமாநுசா ! 

தனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் ஈயும் என் நெஞ்சத்து இராமாநுசா !  (100

என்னைத் துயரகற்றி உயக்கொண்டருளும் இராமாநுசா ! 

கடல் புடைசூழ் வையத்தில் என்றும் என்பால் வண்மை வளரும் ஐயனே இராமாநுசா ! 

கையில் கனியென்ன நல்ஞானம் அளித்தவனே அவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தையனே இராமாநுசா ! 

தன் மெய்யில் பிறங்கிய சீர் அருள்செய் செழுங்கொண்டலே என் இராமாநுசா! 

அடியேன் நெஞ்சில் மேவு நல் ஞானியாய், நல் வேதியர்கள் தொழும் திருப்பாதனே இராமாநுசா ! 

தனக்கு இன்புறவே என் இதயத்துள்ளே இன்று வந்து இருக்கும் மாயனே இராமாநுசா ! 

தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை ஆக்கும் இன்புற்ற சீலத்து இராமாநுசா ! 

தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றினாய், பொங்கிய கீர்த்தி அடிப்பூ எங்கள் தலைமிசையே மன்ன வைத்த இராமாநுசா ! 

வணங்குவம் நின்னை மனத்தால் வாயால் செயலால் 
அடியோம் வணங்குவதும் உன் தன் இன்னருளாலே. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***