Wednesday, November 19, 2014

Mamunivan Irupadhu 3

Mamunivan Irupadhu Verse 11

மாமுனிவன் இருபது வெண்பா 11

மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

Has the Golden age come back again? Has the unchanging golden devotion to Madhavaa waken up in the human heart? Perhaps is it to signify that, Sri Ranganatha has joyfully tendered his euology, which the whole devotional world upholds in its head.

பொற்காலம் மீண்டும் வந்ததோ? மாறாத காதல் என்பது மாதவன்பால் மனித குலத்தில் எழுந்து விட்டதோ? அதுதான் போலும் அரங்கேசர் ஈடு வியாக்கியானம் உபந்யஸிக்கும் அரங்கில் வந்து தாம் உவந்து அந்த வாழ்த்துப் பாவைத் தந்தருளினார். அதனால்தான் போலும் உலகமெல்லாம் அந்த வாழ்த்துப் பாவை தலைமேல் கொண்டுள்ளது.

*
Mamunivan Irupadhu Verse 12

மாமுனிவன் இருபது வெண்பா 12

இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.

Oh! today, is it his star Moolam! Have this world and the beyond, the two have merged into one! Has he gone thither to release down the spiral conveyer-belt? Yea it is his motherly grace, passionate in protecting, the eternal space of divine life, winning over from Kali!

இன்றைக்குத்தான் மாமுனிவனின் மூல நட்சத்திரமோ? மண்ணுலகும், திருநாடும் ஒன்றாக ஆயிற்றோ? அங்கிருந்து சுருள்படி இறக்கத்தான் அவ்வளவு வேகமாகப் போயினனோ? ஆன்ம வர்க்கம் உய்ய வேண்டி ஆன்மிக வாழ்வின் இடத்தைக் கலியினின்றும் வென்று மாமுனிவன் காக்கும் அருள் அன்றோ ஈது!

*

Mamunivan Irupadhu Verse 13

மாமுனிவன் இருபது வெண்பா 13

அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.

Out of His measureless grace He revealed the songs of thousand as the neo-vedas, more complete. And out of His grace He started the commentorial tradition through Pillan. To dispel people's darkness in understanding, under the pretext of arulappadu, He published to all, the great Eedu, the Holy One.

நம்மாழ்வார் ஆயிரம் திருவாய்மொழி பாடியதும் அவன் அருளால் அன்றோ! பின்னர் வியாக்கியான மரபைத் தொடங்கியதும் பிள்ளானால் அவனுடைய அருள்தானே! இருந்தும் மக்கள் உள்ளத்தில் பிரபத்தி மார்க்கத்தில் இருந்த மருள் அனைத்தும் அகற்றும் வண்ணம், அருளப்பாடு என்னும் வியாஜத்தால் நம்பிள்ளை அருளிய ஈடுதன்னை மணவாள மாமுனிவன் மூலம் வெளியிட்டது அவனுடைய பேரருளேயாம்.
*
Mamunivan Irupadhu Verse 14

மாமுனிவன் இருபது வெண்பா 14

வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

The unique tapas of waiting in full faith and total reliance on His Grace alone is called Prapatti. By writing commentaries on Sri Vachana Bhushana expounding its deep meanings, on Rahasyatrayam, the three great secrets of Prapatti, on the eternal three principles of Visishtaadvaita philosophy he has made us study deeply these great works. And more so by writing commentary on Acharya Hrudayam, expounding the world of honey-tamil of Nammalvar, he has made our daily life, a divine living.

அவன் வந்து நம்மை உய்யக் கொள்ளும்வரை ஆற்றியிருக்கும் தவம் என்பது செய்ய தவமாகிய பிரபத்தி. பிரபத்தியின் ஆழ்பொருளைத் தெரிவிக்கும் ஸ்ரீவசன பூஷணத்துக்கும், பிரபத்தியின் நுட்பமான மறை பொருளைத் தரும் மூன்று ரகசியங்களுக்கும், விசிஷ்டாத்வைத தத்துவங்கள் மூன்றையும் விளக்கும் தத்வ திரயத்திற்கும் வியாக்கியானங்கள் இயற்றி அதன் மூலம் நாம் அவற்றை நன்கு கற்கும் வழியைச் செய்தான் மாமுனிவன். அம்மட்டோ! திருக்குருகூரனின் தீந்தமிழை நாம் தினசரி அனுபவிக்கும் படியாக அன்றோ செய்து விட்டது மாமுனிவன் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு எழுதியிருக்கும் அரும் பெரும் வியாக்கியானம்!
*
Mamunivan Irupadhu Verse 15

மாமுனிவன் இருபது வெண்பா 15

தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

The great Amuthanar who composed Sri Ramanuja Nutrandadhi, on attaining Moksha, would have been appointed there also to sing that Prapanna Gayatri to His pleasure. Even that Amuthanar perhaps has relinquished that supreme pleasure and come back to enjoy the clear exposition of his own work, in the puissant commentary of Mamunivan.

வானுலகத்தில் இருக்கும் ஒரே தான் என்னும் பரம சேஷியான பகவானின் உகப்புக்கு வேண்டி அங்கும் தான் இயற்றிய ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி பாடும் உயர்ந்த ஆனந்தத்தில் திளைக்கும் அமுதனாரும் கூட அந்த போகத்தை விடுத்து, பிரபந்ந காயத்ரியை மாமுனிவன் மேலும் மேலும் சுவை மிகுமாறு விளக்கும் அந்த மிக்க போகத்திற்கு ஆசைப்பட்டு வந்துவிட்டானோ என்னும்படியாய் இருக்கும்.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

No comments:

Post a Comment