Tuesday, February 15, 2022

நின்றதுவும் வேங்கடமே!

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது
(39) 
முதல் திருவந்தாதி பாட்டு. இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். 

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச 

பெரும் விளையாட்டுகளில் கலந்து கொள்வோர் தங்களைச் சரியான தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டி வார்ம் அப் பயிற்சிகள் செய்வார்கள். அது போல் கம்ஸனைக் காய்தல் என்னும் செயலுக்காக ஸ்ரீகிருஷ்ணன் செய்து கொண்டிருந்த வார்ம் அப் பயிற்சிகள் போன்ரு இருக்கின்றன பூம்யை இடந்ததுவும், குன்றம் எடுத்ததுவும். 

கிடந்ததுவும் நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

நைட் டூடிக்குச் செல்வோர் பகல் எல்லாம் தூங்கிவிட்டு நைட் ஷிஃப்டில் சென்று விழித்தபடி பணி புரிவது போல எம்பெருமானும் உயிர்களைக் கண் உறங்காமல் காக்க வேண்டி, அதுவும் வேங்கடத்தில் நின்றபடியே காக்கும் பணியைப் புரிய வேண்டி முன் கூட்டியே நன்கு துயின்று தன்னைத் தயார் செய்து கொண்டமைதானோ அவனது பாற்கடலில் அறிதுயில் என்பது? இப்படியெல்லாம் பயிற்சி இல்லையேல் முன்னுறக்கம் என்று சதா காக்கும் இயல்வினனாக அவன் இருப்பதால்தானோ அவன் மேனியில் கடலாக ஓடும் வியர்வை நீர்வண்ணம், அதுதான் பேர் ஓதமோ? 

இடந்தது பூமி
எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - 

கிடந்ததுவும்
நீரோத மாகடலே
நின்றதுவும் வேங்கடமே 

பேரோத வண்ணர்
பெரிது (முதல் திருவந்தாதி 39) 
(இது சும்மா நானாக கற்பனை நவீனமாக விட்ட கதை. உரைகளில் ஆதாரம் கிடையாது) 


சரி. இந்தப் பாட்டுக்கு பேருரை மாமன்னர் என்று, வியாக்கியானச் சக்ரவர்த்தி என்று கொண்டாடப்படுகின்ற பெரியவாச்சான் பிள்ளை என்ன உரை எழுதுகிறார் என்று பார்ப்போமா? 

அவர் எடுத்ததுமே 'நாம் எல்லாம் என்ன நம் வீட்டாரையும், மனைவி குழந்தைகளையும் பெரிதாகப் பாதுகாப்பது போன்றும், அவர்கள் நன்மைக்காக அல்லும் பகலும் உழைப்பது போன்றும் பேசுகிறோமே, அதெல்லாம் எந்த அளவிற்கு?' என்று சொல்கிறார். நம்முடைய பக்தி கூட உண்மை அன்று என்று சொல்கிறார். 

அதாவது நாமெல்லாம் ஆஹா பெருமாள் என்றால், பகவான் என்றால் நமக்கு உயிர் என்று அப்படியே பக்தியில் கண்ணீர் வடிக்கிறோம். பிரசாதம் விநியோகம் செய்பவர் நமக்குக் கொடுக்காமல் தட்டை அந்தப் பக்கம் தள்ளிக்கொண்டு போகட்டும். நம் பக்தி காற்றில் பறந்துவிடுகிறது. இல்லையேல் ஒரு வேளை பசி உணவு கிடைக்கவில்லை என்று ஆகட்டும். அவ்வளவுதான் குணங்கள் காற்றில் பறக்கும். சரி சோற்றிலாவது பெரிதும் ஈடுபட முடிகிறதா? காட்டில் உள்ள சில மிருகங்கள் இரை எடுத்தால் சுமார் ஆறு மாதங்களுக்குச் சேர்த்து இரை எடுக்குமாம். நமக்குக் கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டால் போதும் ஐயோ வயிற்றுக் கோளாறு என்று பட்டின், விரதம் உபவாசம் என்கிறோம். வீட்டில் மனை பெண்கள் என்றால் அப்படி பாசம் என்கிறான். ஆனால் பார்த்தால் போய்ச் சூதாடி இழக்கிறான்; மனைவி பெண்கள் நடுத்தெருவில். சொல்கிறோமே அன்றி நமக்கு ஒன்றிலும் உண்மையான சிநேகம் என்பது இல்லை. அதுவும் தூக்கம் வந்தால் போதும். எது எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. நாம் அன்பு என்று சொல்கிறோம். ஆனால் நமக்கு உண்மையான அன்பு இல்லை. 

ஆனால் நமக்கு எல்லாம் குடும்பத் தலைமையாக இருப்பவர் எப்படி அன்பு மயமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் கற்றுத் தருகிறாராம். பாருங்கள் எவ்வளவு சிரத்தையாக எல்லாம் முன்கூட்டியே யோசித்து யோசித்து உயிர்களின் பாதுகாப்புக்கு வேண்டி எலாவற்றையும் செய்கிறான். இந்த உலகம் என்ன அப்படியே உருட்டிவிட்ட பந்து மாதிரி வந்து நின்றுவிட்டதா? இல்லையே. இதுவும் நெருப்பா இருந்து குழம்பா இருந்து ஒரே மலையா, வெப்பமா இருந்து, இதில் உயிர் வாழத்தகுந்த யோக்கியதை வரும்படி பண்ணினான். 

இடந்தது பூமி. 

மலையை எடுத்து கல்மாரி காத்து உயிர்களை இரட்சித்தான். 

கம்ஸனை அழித்தான். எப்படி? சும்மாவானும் சண்டை என்பது வியாஜம். கம்ஸன் ஏன் அழிந்தான் என்றால் அது ஒரு உள இயல் உத்தி. கம்சனுக்குப் பயம் என்பதை ஏற்படுத்தி ஏற்படுத்தியே அவன் வலிமை எல்லாவர்றையும் அழித்தான். கம்ஸன் அழிந்தது உண்மையில் பயத்தால். அந்த பயத்தைக் கருவியாகக் கொண்டு கஞ்சனை முன் அஞ்ச அழித்தான். 

பிரளய ஆபத்தால் வந்த அசதி, இந்திரனால் வந்த அசதி, கம்சனைப் போராடி அழித்ததால் வந்த அசதி எல்லாவற்றுக்கும் சேர்த்து கண்வளர்ந்தது பாற்கடலில். தூக்கம் வருகிறதா? ம் ம் உயிர்கள் என்ன ஆகிறதோ என்று கவலையில் வந்து திருவேங்கடத்தில் தன் கண்பார்வையில் இருக்கட்டும் என்று நிலையாக நின்றுவிட்டான். 

இதுவல்லவோ உண்மையில் குழந்தை குட்டிகளைக் கண்ணில் வைத்துப் போற்றிக் காப்பாற்றும் உண்மையான குடும்பத் தலைமை அன்பு என்பது! என்று வியக்கிறார் வியாக்கியான சக்கிரவர்த்திகள். 

பேரோத வண்ணர் பெரிது நின்றதுவும் வேங்கடமே. 

***

2 comments:

  1. அற்புதமான விளக்கம்

    ReplyDelete
  2. உங்கள் விளையாட்டு வியாக்கியானம் இன்னும் சுவையாய் உள்ளது. அவனிடம், அன்பும் உரிமையும் இருக்கும் பட்சத்தில் புதிய நிர்வாகங்கள் வரவேற்கப்பட வேண்டும்!

    ReplyDelete